ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம்
– அஸ்ரப் ஏ. சமத் –
அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரோடு இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, ஐ.ம.சு.முன்னணியின் 13 பிரமுகர்களில், 07 பேர் பின்வாங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இதனால், அமைச்சர் ராஜிதவின் குழுவில், 06 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனா்.
ஐ.ம.சு.முன்னணியிலிருந்து அமைச்சர் ராஜிதவோடு இணைந்து சென்று, ஐ.தே.கட்சியில் போட்டியிடவிருந்தவர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அமைச்சர் ராஜிதவோடு இணைந்து செல்வால்கள் என நம்பப்பட்ட, அமைச்சா்கள் ரேஜினோல் குரே மற்றும் சரத் அமுனுகம ஆகியோர், அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ராஜித அணியில் இணைவார் என நம்பப்பட்ட அமைச்சா் எஸ்.பி. திசாநாயக்க, ஜக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி சார்பாக, கண்டி மாவட்டத்தில் முதன்மை வேட்பாளாராக போட்டியிடுவுள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றையவர்களான – நியுமல் பெரேரா, அமைச்சா் பியசேன கமகே, சுதா்சினி பெர்னான்டோ பிள்ளை மற்றும் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோா், ஒருபோதும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியை விட்டு விலகப் போவதில்லையென, தொலைக்காட்சிகளில் நேரடியாகத் தோன்றி – தத்தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளனா்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியில் வேட்புமனு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர், ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து சென்று, ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். இவர்களுடன், மேலும் பல – ஐ.ம.சு.முன்னணியினர் பிரிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே, மேற்படி நிலைவரங்கள் உருவாகியுள்ளன.