சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

🕔 March 28, 2017

– க.கிஷாந்தன் –

வெள்ளை வேனில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து – சாரதியை தாக்கி விட்டு, ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்றதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து, பால் சேகரிப்பாளர் வீட்டுக்கு பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்து வேளையில், டொல்பின் ரக வெள்ளை வேனில் வந்த சிலர், லொறிக்கு குறுக்காக வானினை நிறுத்தி, தாங்கள் பினான்ஸ் கம்பனியிலிருந்து வந்துள்ளதாகவும், குறிநத்த லொறிக்கு தவணை பணம் செலுத்தாததால் அந்த லொறியினை கொண்டு செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து லொறியின் சாவியினை வேனில் வந்தவர்கள் எடுத்தாகவும், சாரதி கொண்டு வந்த பணப் பையினை பறித்தெடுத்தாகவும் கூறப்படுகிறது. இதன் போது சாரதியின் கையை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியதாகவும் பின் தலையில் கட்டையொன்றினால் தாக்கி லொறியினையும் பணத்தினை எடுத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்ட சாரதி ஆர்.சின்னையா தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான சாரதி பொலிஸ் விசாரணையின் பின்னர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

லொறியினை எடுத்து சென்றவர்கள், சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் லொறியினைக் கைவிட்டு, பணத்தினை மாத்திரம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணம் வட்டகொடை பசும் பால் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வேனில் வந்தவர்கள் அரச உத்தியோகத்தவர்கள் போல் உடை அணிந்திருந்ததாகவும், சுமார் ஐந்து பேர் வரை வேனில் இருந்தாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்