நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு

🕔 March 22, 2017
– எம்.ஜே.எம். சஜீத் –

கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு  நோய் விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியான முறையில் செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் குற்றம் சாட்டினார்.

இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு நேற்று புதன்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரினால் கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இப் பிரேரணை தொடர்பில் உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேற்கன்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“திருகோணமலை மாவட்டத்தில், குறிப்பாக இரண்டு பிரதேசங்களில் டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. அவற்றில், மூதூர் கிண்ணியா போன்ற பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன.

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோய் ஏற்படுவதற்கு முன்னர், மூதூர் வைத்தியசாலையில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அனுதிக்கப்பட்டிருந்தனர். இருந்தும் கிண்ணியாவில் அதிகமான மரணம் ஏற்படக் காரணம் என்ன? இதுதொடர்பில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? அல்லது விசேட நிபுணர்களை கொண்டுவந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? டெங்கு நோய்க்கு அன்று நடைமுறையில் இருந்துவந்த சிகிச்சை அளிக்கின்றார்களா? என்பது பற்றி எல்லோருக்கும் சந்தேகம் உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இது டெங்கு நோயா அல்லது வேறுவிதமான வைரஸ் பரப்பப்படுகின்றதா? என்பது பற்றி தெளிவில்லாமல் உள்ளது. எனவே இவற்றை ஆராய வேண்டிய பொறுப்பு உள்ளது.

மரணித்தவர்களை பரிசோதணை செய்து, என்ன நோயினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கிறது என்பதுபற்றி இதுவரை ஏதும் முடிவுகள் எடக்கப்பட்டிருக்கின்றதா என சந்தேகம் இருக்கின்றது. தற்போது ஏற்பட்டிருப்பது டெங்கு நோய் என்றால் அதனால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தில் மரணங்கள் ஏற்படாத நிலையில், கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் மரணம் ஏற்படுகின்றது என்றால் அதற்கு என்ன காரணம் என்கிற சந்தேகமும், அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது.

டெங்கு நுளம்பு கடித்ததன் பிற்பாடு, அந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஜெலி தன்மைக்கு உடனே மாறுகிறது. ஆனால், கடந்த காலங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் அவ்வாறு, ஜெலி தன்மைக்கு மாறவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்த வித்தியாசமான மாற்றம் உடலிலே ஏற்படுகின்றமையானது, மக்களிடத்திலே பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விசேட குழுவொன்றை நியமித்து, இந்த நோய் தொடர்பில் நுனுக்கமாக ஆராயவேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு உள்ளது” என்றார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகிய இவரும், மு.காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்