கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம்
🕔 January 27, 2017
– க. கிஷாந்தன் –
ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர், பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும், ஹட்டன் – குடாஓயா பிரதான வீதியில் நேர்க்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். லொறி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த காயங்களுக்குள்ளான இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.