தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நிந்தவூரில் திறக்கப்படுகிறது

🕔 January 25, 2017

Dr. Nakfer - 02– றிசாத் ஏ காதர் –

லங்கையில் தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை எதிர்வரும் சனிக்கிழமை நிந்தவூரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.

சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவுடைய பங்குபற்றுதலுடன் இந்த வைத்தியசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

மேற்படி ஆராய்ச்சி வைத்தியசாலை திறப்பு விழா நிகழ்வுக்கு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோருடன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் மற்றும் மாகாண சுகாதரா அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் ஆகியோருடன் மத்திய, மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்களும் இந் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைத்தியசாலை நிர்மாணத்துக்காக, இவ்வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 198 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கான நிரந்தர கட்டட நிர்மாணிப்புக்குரிய காணியினை, நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கான நிரந்த கட்டட நிர்மாண வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், ஆயர்வேத மருத்துவத் துறை தொடர்பாக மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தினால், தற்காலிகமாக சுகாதார மத்திய நிலையத்தில் இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் நிந்தவூர் ஆயர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்