ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்

🕔 January 17, 2017
Hisbullah - 75றட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில்;

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வீழ்ச்சி கண்டுள்ளதால், விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, வறட்சி தொடர்பாக விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமொன்று கடந்த 13ஆம் திகதி நடத்தப்பட்டது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் இதுவரை சுமார் 68ஆயிரம் ஏக்கர் விவசாய காணி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 13,164 விவசாயிகளும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக 76,199 பொது மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க தங்களது அமைச்சுக்களினால் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்