பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை
– றிசாத் ஏ காதர் –
பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள் பயணிக்க முடியா நிலைவரம் உருவானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது. இந்நிகழ்வு சமூகங்களிடையே அச்ச உணர்வை மேலோங்கச் செய்தமையின் விளைவாக, குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் பொதுபலசேனாவினருக்கு உள்ளநுழைய முடியாமல் போனது.
இதனால் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில் போக்குவரத்தினை இடைமறித்து அவர்கள் அமர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
ரிதிதென்ன பிரதேசம் மூவின மக்களும் வாழும் பகுதியாகும். இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்துடன் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்பட்ட வீதி மறியலினால், போக்குவரத்து மார்க்கம் முற்றாக பாதிக்கப்பட்டதோடு, நீண்ட தூரம் வரை வாகனங்கள் நகர முடியாமல் தரித்து நின்றதாகவும் அங்கிருப்போர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் எம்முடன் தொடர்பினை ஒருவர் கூறுகையில்; கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி வந்ததாகவும், காலை 10.00 மணிக்கு அவ்விடத்தினை அடைந்தும் கூட, தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் பிற்பகல் வரை வாகனத்துடன் காத்துக்கிடப்பதாகவும் தெரிவித்தார்.
மாலை 6.00மணி வரையிலும் அங்கு பாதையினை மறித்துக் கொண்டு அவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலநறுவை – தெஹியத்தகண்டி ஊடாக சிலர் அக்கறைப்பற்று நோக்கி வருவதாகக் கூறினர்.
அங்குள்ள ரயில் பாதையையினையும் பொதுபலசேனாவினர் இடைமறித்திருந்ததாகவும் அறிய முடிகிறது.