‘சமூக ஜோதி’ சலீம்; மேலதிக செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்
🕔 December 1, 2016
– யூ.கே. காலித்தீன் –
சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஏ.எல். சலீம் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று வியாழக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜக்கத் பி விஜேயவீர, அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித செனவிரத்ன, சிரேஸ்ட உதவிச் செயலாளர் நிசாந்த வீரசிங்க, திவிநெக்கும திட்டமிடல் பணிப்பாளர் எம்.ரி. வஹாப்தீன், திவிநெக்கும திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஐ. அலியார், சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்துறையில் சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல். சலீம், சாய்ந்தமரு பிரதேச செயலாளராகக் 10 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக
நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் 1995 ஆண்டு சித்திபெற்று கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் – உதவி ஆணையாளராக இவர் பணியாற்றினார். இதன் பின்னர் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் உதவி கட்டுப்பாட்டாளராக நீண்ட காலம் கடமையாற்றினார்.
இக் காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலுள்ள ஜெனீவா தூதரகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களக் காரியாலத்திலும் உதவி கட்டுப்பாட்டாளராகவும் செயற்பட்டார்.
பின்னர் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சில் உதவி செயலாளராக பணியாற்றினார்.
பின்னர் அரசாங்க தகவல் திணைக்கள பிரதிப்பணிப்பாளராகவும் சில காலம் பணிபுரிந்தார்.
இதனையடுத்து சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலாளராக நியமனம் பெற்ற இவர், சுமார் 10 வருடங்கள் அந்தப் பதவியினை வகித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்ளுடன் தொடர்பு கொண்டு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு பெரிதும் பங்காற்றினார்.
தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல் – ஜலால் மற்றும் மல்கரு ஸம்ஸ் வித்தியாலயங்களில் கற்றார். உயர் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியில் மேற்கொண்ட இவர் ஆசிரியர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று சாஹிரா கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.
ஆசிரியர் சேவையில் இருந்த காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தைப் பூர்த்தி செய்தார்.
பின்னர் கல்வி நிர்வாகசேவை பரீட்சையில் சித்தி பெற்று, இதே கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றினார்.
பொது நிர்வாகத்துறை, கலைத்துறை ஆகியவற்றில் முதுமானி பட்டங்களை பெற்றுள்ளார்.
நிர்வாகத்துறை தொடர்பாக மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார்.