நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல்

🕔 November 21, 2016

– அஷ்ரப். ஏ. சமத் –

நாட்டில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தமையானது, இலங்கையின் இறைமையையும், மிகவும் கண்னியமும் ஒழுக்கமும் மிக்கதுமான உலகில் நன்மதிப்பைப் பெற்ற எமது ரானுவத்தையும் கொச்சைப்படுத்திமைக்கு ஒப்பாகும் என்று தொழிற்பயிற்சி  அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும், தினேஷ் குணவர்த்தன கூறியமைபோல் – இலங்கை ராணுவத்திடம அவ்வாறு எந்தவிதமா சதிகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே,  அமைச்சா் மகிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“முப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் கீழ் திறம்பட இயங்கி வருகின்றனர்.  ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக பேசுபவா்கள்,  இந்த உள்ளுரில் மட்டுமன்றி சர்வதேசத்திலும், இலங்கை பற்றிய தப்பிரயத்தினை ஏற்படுத்துகின்றனர். மேலும், இலங்கையின் ஜனநாயகத்தினையும் கொச்சைபடுத்துகின்றனர்.

இந்த அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின்போது, எவ்வித எதிா்ப்புகளுமின்றி தமிழ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, மூன்றில் இரண்டை விடவும்  அதிகமான வாக்குகள் கிடைத்தன.  இது – எமது கூட்டாட்சி அரசாங்கத்துக்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையின் கீழான  இந்த அரசாங்கம்,  உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் இலங்கை பற்றிய நல்லதொரு மதிப்பை பெற்றுள்ளது.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தினையும் நிறைவேற்றி வருகின்றார். அப்போது ஜனாதிபதியாகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ, தான் தோற்றுப்பேனால் மின்சாரக் கதிரையில் அமா்த்தப்படுவேன் என்றார். இந்த நாட்டில் உள்ள ராணுவ அதிகாரிகள் சர்வதேச நீதிமன்றக் கூட்டில் நிறுத்தப்படுவாா்கள். இலங்கைக்குள் வெளிநாட்டு நிதிமன்றம் ஒன்று வரும்  எனத்  தெரிவித்து மக்களிடம் வாக்கு கேட்டாா்.  ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – சர்வதேசத்தை எதிர்கொண்டு, தனது நிலைப்பாட்டினைத் தெரிவித்து, மஹிந்த அச்சப்பட்ட விடயங்களை வெற்றிகொண்டுள்ளார்.  இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை மின்சாரக் கதிரையிலிருந்து ஜனாதிபதி மைத்திரி காப்பாற்றியுள்ளார்.

இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சபையின் உப குழு கூடி ஆராய்ந்துள்ள அறிக்கை, பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிா்வரும் வெள்ளிக்கிழமை – நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கனவே வாக்குறுதியளித்த  ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது. 19 வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மக்களுக்கு உள்ள உரிமையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இந்த நாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமா் ரணில விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் பாரியதொரு அபிவிருத்திப்  புரட்சியில் கால் எடுத்து வைத்துள்ளது. இந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

கடின போக்குடைய  மதவாத குழுக்கள் –  சமமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வதற்கு,  நீதியமைச்சா் சமமான சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். சகல சமூகங்களும்,  இந்த நாட்டில் வாழும் சகல பிரஜைகளும் சமமாக வாழ உரிமை உள்ளவர்கள்.

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு, 08 வருடத்துக்கு முன்பாகவே நீதியரசா் சலீம் மர்சூக் தலைமையில், முஸ்லிம் சமூகம் முன்வந்தது.

அதனை அவா்கள் மிகவிரைவில் அரசியலமைப்பில் சமா்ப்பிப்பார்கள். அதில் அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன்  போன்ற அமைச்சா்கள் உள்ளனா் . இச் சட்டம் தொடர்பில், அந்த சமுகம் சாா்ந்தவா்களுடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும். அதே போன்று  கண்டிய சட்டம், தேச வழமைச்சட்டம் போன்ற தொடர்பிலும், அந்தந்த சமூகங்களின் பங்களிப்புடன்தான் தீர்மானங்கள் எட்டப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்