கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

🕔 October 28, 2016

aravindh-kumar-mp-011பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், நேற்றைய தினம் கடுமையான மஞ்சள் நிறத்தில் சேர்ட் அணிந்து கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, சபையினுள் கடமையிலிருந்த ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த்திடம் வந்து, “ஐயா, உங்களுடைய ஆடை பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்” என்று எச்சரித்திருத்தனர்.

இதனையடுத்து, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறினார்.

இதேவேளை, நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரி சார்ஜன் அனில் சமர சேகர கூறுகையில்; நாடாளுமன்ற உறுப்பினரை, தாங்கள் சபையிலிருந்து வெளியேறுமாறு பணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடும் நிறத்திலான சேர்ட் அணிந்து கொண்டு – நாடாளுமன்ற அமர்வில் ஆண் உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாது என்றும், பாதுகாப்பு அதிகாரி சார்ஜன் அனில் சமர சேகர  தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்