லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொல்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டதாக, லசந்த கொலை வழக்கு சட்டத்தரணி அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார்.
மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று செவ்வாய்கிழமை காலை லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக் கூறினார்.
லசந்தவின் பிரேத பரிசோதனையை முன்னெடுத்திருந்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும், அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைக்கும் முரண்பாடுகள் காணப்படுவதாக சட்டத்தரணி அதுல மேலும் கூறினார்.
இதன் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கிலேயே சடலத்தை மீள் பிரேத பரிசோதனை செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லசந்தவின் உடல், மயானத்தில் வைத்தே பரிசோதனை செய்யப்பட்டது.