வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, நிதிக்குற்றப் புலனாய்வினர் கைது செய்ய வேண்டுமென பிவிதுரு ஹெலஉறும கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை கூறினார்.
பிணையில் விடுவிக்க முடியாத குற்றமொன்றினை விக்னேஸ்வரம் புரிந்துள்ளதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
பிவிதுரு ஹெலஉறும கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
“எழுக தமிழ் எனும் எதிர்ப்பு நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் மக்களை கலந்து கொள்ளுமாறு தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதோடு, அதற்காக தனது உத்தியோகபூர்வ முத்திரையும் பயன்படுத்தியுள்ளார்.
மேற்படி நிகழ்வானது நாட்டினைப் பிரிப்பதற்கானது. மட்டுமன்றி அரசியல் யாப்புக்கு எதிரானதாகும்.
வடக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேறுமாடு விக்னேஸ்வரன் கூற முடியாது. அரசியலமைப்பின்படி, இந்த நாட்டிலுள்ள ஒருவர் – தான் விரும்பி இடத்தில் வசிக்க முடியும் என்பது, அவரின் அடிப்படை உரிமையாகும்.
எனவே, விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து, முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதிலிருந்து விக்னேஸ்வரன் தப்பிக்க முயற்சி செய்யக்கூடும். ஆனாலும், இனவாதத்தைத் தூண்டிய குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்யலாம்” என்றார்