மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையில் ‘டீல்’ உள்ளது என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக தெரிவித்தார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து, தன்னைக் பாதுகாத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்படுகின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கி, குழப்பத்தை ஏற்படுத்த ரணிலுக்கும் மஹிந்த அணி தேவைப்படுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தான் என்ன குற்றம் செய்தாலும், எவ்வாறு செயற்பட்டாலும் ரணில் தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மஹிந்த ராஜபக் ஷவுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் அவர் நடமாடுகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி மறைமுக தொடர்புகளை வைத்துள்ளதாக கூறுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதை தெரிவித்துள்ளார். உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுடன் யாருக்கு ரகசிய உடன்படிக்கை உள்ளது. எமக்கா அல்லது இன்று பொது எதிரணியென கூறிகொள்ளும் நபர்களுக்கா?
சிரந்தி ராஜபக்ஷவை நிதி மோசடி குற்றச்சாட்டில் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்தபோது, அங்கு விசாரணைகளை நடத்தாது சபாநாயகர் வீட்டுக்குச் சென்று வாக்குமூலத்தை கொடுத்தது எவ்வாறு? இதில்’டீல்’ இல்லையா?
அதேபோல் இந்த விசாரணையில் சிரந்தி ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்க அறிக்கை வந்தும், இன்றுவரை அவரை கைதுசெய்யாது நான்கு மாத காலமாக காப்பாற்றுவது யார்?
மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்புகளை ஏற்படுத்தியே இந்த குற்றங்களில் இருந்து தப்பித்து வருகின்றார். இதுதான் இவர்கள் கூறும் ‘டீல்’.
அதேபோல் கடவுச்சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்சவை கைது செய்யாது காப்பாற்றியது யார்? இந்த விடயத்தை பிரதமர் நாடாளுமன்றத்தில் நேரடியாகவே தெரிவித்தார்.
பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்படுவதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும் ஒரு டீல்தான்.
ஜனாதிபதி பிரதமருடன் இவர்கள் உடன்படிக்கைகளை செய்துகொண்டு நாடகமாடுகின்றனர்.
ரணில் எப்போதும் ஜே.ஆர் இன் கொள்கையில் பயணிப்பவர். தமக்கு எதராக எழும் சவால்களை இல்லாமலாக்குவதோடு, தமக்கு எதிராக எதிரணி உருவாகக்கூடாது என்பதே ஜே.ஆர் இன் கொள்கையாகும். அதே வழியில்தான் ரணிலும் பயணிக்கின்றார்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அவ்வாறான நகர்வால்தான் பிளவுபட்டுள்ளது. ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பெரிய டீல் உள்ளது.
அதேபோல் இந்த பாதயாத்திரைகூட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான ஒன்றல்ல. இது ரணிலின் ஆட்சியை பலப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான உரையின்போது கூட, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரையோ அவர்களது செயற்பாடுகளையோ ஏன் விமர்சிக்கவில்லை.
எம்மையும், சுயாதீன ஆணைக்குழுக்களையும் மட்டுமே அவர் விமர்சித்தார். ஆகவே யார் ரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இப்போது நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.