லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் – இன்று அடையாளம் காட்டப்பட்டார்.
கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில் இன்று புதன்கிழமை அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது, சந்தேக நபரை, லசந்தவின் சாரதி அடையாளம் காட்டினார்.
இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டியதாக கூறப்படும் சார்ஜன்ட் மேஜரை, லசந்த விக்ரமதுங்கவின் சாரதி அடையாளம் காட்யதாக,லசந்த வழக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதுல எஸ். ரணவக்க கூறினார்.
இதேவேளை, கொலை நடத்த தினம், அதனை நேரில் பார்த்தவர்களை எதிர்வரும் 03ம் திகதி சாட்சியமளிக்க அழைக்குமாறு, கல்கிசை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இன்று உத்தரவிட்டார் எனவும் சட்டத்தரணி அதுல எஸ். ரணவக்க தெரிவித்தார்.
கொலை இடம்பெற்ற போது, தான் அணிந்திருந்த தலைக்கவசத்தை கழற்றியபடி, அங்கேயே பார்த்துக் கொண்டிருந்த நபரை, கண்ணால் கண்ட சாட்சி ஒருவரை, 03ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைத்துள்ளதோடு, அன்றையதினம் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ள ராணுவ உத்தியோகத்தரை மீண்டும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபர் – ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.