மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை
ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தப் பாத யாத்திரையானது, கண்டி நகரிலிருந்து ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, மேற்படி பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கு இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத்திட்டம், நாளை காலை ஆரம்பமாகவிருந்த நிலையில், அதனை நாளை பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் மேற்கொள்ளுமாறும் – அமைச்சர்களான கபீர் ஹாசிம் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.