ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத்

🕔 July 25, 2016

Majeed - 098மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்று, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான முழக்கம் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

முழக்கம் மஜீத், அங்கு மேலும் பேசுகையில்;

“மு.கா செயலாளர் ஹசன் அலியின் மகனும், கட்சியின் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் மகனும் இணைந்து – கிழக்கின் எழுச்சிக் கோஷத்தை முன்னெடுக்கின்றனர். ஹசனலியினதும், சேகுவினதும் இளவரசர்களே – கிழக்கின் எழுச்சி என்று சொல்லிக் கொண்டு, சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முனைகின்றனர்.

18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதற்காக – ரவூப் ஹக்கீம் பணம் பெற்றுக் கொண்டார் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது உண்மை என்றால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதில் தனக்கு சம்மந்தம் இருக்கவில்லை என்றால், ஏன் அவர் அதனை வெளியிடவில்லை. வடக்கும் – கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, ஹசன் அலி கூறி வந்தார். ஆனால் இணைக்கப்படக் கூடாது என்று மகன் கூறுகின்றார்.

1991ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கருத்தொன்றுடன் முரண்பட்ட சேகு இஸ்ஸதீன், 24 மணித்தியாலங்களுக்குள் தலைவரினால் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, 48 மணித்தியாலங்களுக்குள் உயர்பீடம் கூட்டப்பட்டு, அதன் அங்கீகாரத்துடன் அவர் கட்சியில் இருந்து முழுமையாக வெளியற்றப்பட்டிருந்தார்.

அவ்வாறு காலத்துக்கு காலம் கட்சியுடன் முரண்பட்ட நான்கு தவிசாளர்களும், செயலாளர் பதவியிலிருந்த பாரிஸ்டர் ஓஸ்மானும் கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர்.

இப்படி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்கும் முரண்படுவோருக்குமே கிழக்கின் எழுச்சி தேவைப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது கட்சி, கிழக்கை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை.

அவ்வாறென்றால் மர்ஹூம் அஷ்ரப் கல்முனையிலோ, மட்டக்களப்பிலோ, திருமலையிலோ வைத்தே கட்சியை பிரகடனப்படுத்தியிருப்பார். ஆனால் அவர் கொழும்பு பாஸாவிலாவில் வைத்தே இதனை அரசியல் கட்சியாக பிரகடனம் செய்திருந்தார்.

இன்று நாடு ஒரு முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன தொடர்பில் தீவிரமாக ஆராயப்படுகிறது.

இவ்வாறான ஒரு நல்ல சூழ்நிலையில், கிழக்கின் எழுச்சிக் கோஷம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

முஸ்லிம் சமூகத்துக்காக, எங்கும் சென்று பேசத் தகுதியான ஒரே தலைமைத்துவமாக இருக்கின்ற ரவூப் ஹக்கீமை, கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என கூச்சலிட்டு, சமூகத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் சதிகள் அரங்கேற்றப்படுகின்றன என்றால், அந்த சூழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கின்ற சக்திகள் எவை என்பது கட்டாயம் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்