
பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர்.
பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் திரளாகக் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டுக் கொன்றபோது, குறித்த நபர் யார் என்ற அடையாளம் இதுவரை தெரியவில்லை.
சம்பவம் குறித்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “பேஸ்டைஸ் தினத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கனரக லொறி ஒன்று தாறுமாறாக மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் லாரி ஓட்டுநர் வேகமாக செலுத்த எதிரே சிக்கியவர்கள் அனைவரும் பலியாகினர்” என்றார்.
இரண்டாவது தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பரீஸில் சில மாதங்களுக்கு முன்னர், ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். ஆயினும், இந்த தாக்குதலில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாகத் தெரிகிறது.
துனிசியா நாட்டைச் சேர்ந்தவரா?
தாக்குதலில் ஈடுபட்ட நபர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என்று பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. குறித்த நபர் 31 வயதுடை இளைஞர் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் 42 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லொறியில் ஆயுதங்கள்
தாக்குதல் நடத்திய கனரக லொறியினைக் கைப்பறிய பொலிஸார் அதனை சோதனைக்கு உட்படுத்திய போது, அதனுள் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை பொலிஸார் சுட்டுக் கொல்வதற்கு முன்னர், அந்த நபர் பொலிஸாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




