கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த
“எனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்கான என்னுடைய அரசியல் பயணம் எப்போதும் தொடரும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“எனது பிள்ளைகளை கைது செய்து அதன் ஊடாக தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது” என்றும் அவர் கூறினார்
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ நேற்று கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது புதல்வரின் கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்;
“கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது. எமது பிள்ளைகளை கைது செய்வதன் ஊடாகவோ அல்லது எமது முழு குடும்பத்தையும் சிறையில் அடைப்பதன் மூலமாகவோ மக்களுக்கான எமது சேவையை தடுத்து நிறுத்த முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு தற்பொழுது சந்தோஷமாக இருக்கும். யாரையும் கைது செய்வதற்கு முன்னர், இன்னார் கைது செய்யப்படப் போகின்றார் என்பதை அமைச்சர்கள் ஏற்கனவே கூறிவருகின்றனர்.
இதன்படியே கைதுகளும் இடம்பெறுகின்றன. இதுதான் நல்லாட்சி” என்றார்.