தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது
– எப். முபாரக் –
தோப்பூர் ஆஸாத் நகர் – மீரா தைக்காப் பள்ளிவாசலில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் பலியானார்.
வாள் வெட்டுக்குள்ளாகி பலியானவர், அவரது மைத்துனரை கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, மூன்று மாதங்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதன்போதே, இவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில், வாள்வெட்டில் பலியானவரின் மைத்துனர்கள் மூவரை கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.