இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்
வரி அறவீடுகள் தொடர்பில் இறைவரித் திணைக்களத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அது குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார்.
வரிகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தபோதும், அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், அப்பரிந்துரைகளை சபையில் வெளிப்படுத்தி விவாதத்திற்கு எடுக்க வேண்டுமெனவும் கோரினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
கடந்த காலங்களில் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இந்த சபையில் கொண்டு வரப்பட்டுள்ளன. 1994 ஆம் ஆண்டு நானும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஒரே சமயத்திலேயே பாராளுமன்றத்துக்கு வந்தோம். அதன் பின்னர் பல விடயங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவ்வாறிருக்கையில் அரசாங்கங்களில் காணப்படும் பிரதானமானவர்களை இலக்கு வைத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்படுவதை நாம் கண்டு வந்திருக்கின்றோம். லக்ஷ்மன் கதிர்காமர் போன்றவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்தார்கள்.
ஆனால் அதனால் எதனையும் சாதிக்கவில்லை. அதேநேரம் அந்த நபர்களும் தமது இயல்பான செயற்பாடுகளை நிறுத்தவுமில்லை. தற்போது நிதி அமைச்சருக்கெதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
உண்மையிலேயே நாட்டின் பொருளாதாரத்துக்கு எதிராகவே இப்பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு கடந்தகால ஆட்சியாளர்களே காரணமாக இருக்கின்றனர். நாட்டின் வருமானத்தில் பாரிய செல்வாக்கைச் செலுத்தும் வரி பெறுகை முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டின் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் இறைவரித் திணைக்களம் முறையாக செயற்படவில்லை. அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
வரி அறவீடுகளை முறையாக மேற்கொள்ளாது பக்கச்சார்பாக செயற்பட்டார்கள். இவ்வாறு வினைத்திறன் அற்ற செயற்பாட்டின் காரணமாகத்தான் பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டது. இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உண்மையிலேயே எனது தேடல்கள் ஆய்வுகளின் பிரகாரம் இறைவரித் திணைக்களத்தில் அத்தொகை 06 மடங்கிலான தொகையே மோசடியாக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பாரிய மோசடி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது நாட்டின் வரி அறவீடு ஓரளவு முறையாக இடம்பெறுகின்றது. பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதும், பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு வற்வரி அதிகரிக்கப்படவில்லை. இதன் மூலமாக எதிர்காலத்தில் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புருவாகும்.
அதேவேளை, கடந்த காலத்தில் வரி தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. இவ் ஆணைக்குழுவானது பரிந்துரைகளை வழங்கியுள்ள போதும் தற்போது வரையில் அவை கிடப்பில் போடப் பட்டுள்ளன.
ஆகவே அவ்வறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என இச்சமயத்தில் கோருவதோடு, எமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்கும் என்றார்.