பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார்
🕔 June 9, 2016
– அஷ்ரப் ஏ சமத் –
ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையில் இருந்துவரும் மாணவனின் குடும்பத்துக்கு, கடந்த வாரம் பிரதமர் அன்பளிப்பாக வழங்கிய வீட்டில், மாணவனின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை குடியேறினர்.
சசிந்த அல்விஸ் எனும் ரோயல் கல்லூரி மாணவன், கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு இயங்க முடியாமல் உள்ளார். இந்த நிலையில், இவரின் குடும்பம் வசித்து வந்த வீட்டினை, வீதி விஸ்தரிப்பின் பொருட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடைத்து விட்டனர்.
இவ்விடயங்களை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி மாணவனின் குடும்பத்தாருக்கு கடந் வாரம் மருதானையில் வீடொறினை அன்பளிப்பாக வழங்கினார்.
குறித்த வீட்டில், மாணவனும், அவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இன்று குடியேறினார்கள். இவ் வைபவத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.
இதன்போது அமைச்சர் சஜித் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
“இந்த மாணவர் தனது தந்தையை இழந்தவர். அத்துடன் கடந்த 03 வருடங்களாக நோய் வாய்பட்டு பேச முடியாமல் உள்ளார். இவர் ரோயல் கல்லூரின் நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சுத்தினறி சுயநினைவில்லாமல் உள்ளாா்.இம் மாணவனும் இவரது குடும்பமும் வாழ்வதற்கு வீடொன்று இல்லாமல் கொள்ளுப்பிட்டியின் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். அவ் வீடும் பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை செலுத்திய நஷ்டஈடும் இம் மாணவணின் தந்தையின் சகோதரா்களுக்கே செலுத்தப்பட்டுள்ளது. காரணம் இவ் வீட்டின் உறுதிப்பத்திரமும் கூட வேறு ஒருவருக்குச் சொந்தமாகும்.இந்த தகவல்களையெல்லாம் ஊடகங்கள் வெளிக் கொண்டுவந்தன. அதற்காக ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இம் மாணவனுக்கு வழங்கப்பட்ட வீட்டின் பெறுமதி 37 இலட்சம் ரூபாவாகும். இவ் வீட்டினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபை வழங்கியுள்ளது.