ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண்
🕔 June 4, 2016
– க. கிஷாந்தன் –
ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும், மிகவும் மோசமாகவும் இருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையில் காணப்படுவதாகவும், இவை, நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றதாகவும் அவர் கூறினார்.
பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரிக்கு அமைச்சர் ராதாகிருஸ்ணண் நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, அங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் பற்றி ஆராய்ந்ததோடு, தொடர்ச்சியாக மாணவர்களும், பெற்றோரும் முன்வைத்து வரும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
இதனையடுத்து, அவர் கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
“மலையக மாணவர்களுகாக விசேடமாக ஆரம்பிக்கப்பட்ட ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியின் நிலைமையை பார்க்கின்றபொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது.இலங்கையில் இருக்கின்ற கல்லூரிகளில் இயற்கை அழகையும் அதிகமான இடப்பரப்பையும் கொண்ட ஒரு இடமாக இந்த கல்லூரியிருந்தாலும், இதன் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. அதற்கு முழுமையான பொறுப்பை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன்போது நான் நேரில் கண்ட விடயங்கள் என்னை வெகுவாக பாதித்துள்ளன.
குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரம் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மரக்களிகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. சமயல் அறை வெளிச்சம் இல்லாமலும் அசுத்தமாகவும் இருக்கின்றது. அரசாங்கம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தற்பொழுது பாரிய நிதியை கல்விக்காக ஒதுக்கியுள்ளது. ஆனால், அந்த நிதி முறையாகவும் நேர்மையாகவும் பயன்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் மாணவர்கள் பல குறைபாடுகளை என்னிடம் நேரில் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த மாணவர்களுக்கு நிர்வாகம் ஏதும் தடைகளை எற்படுத்துமாக இருந்தால் அவர்கள் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு நாங்கள் இடமளிக்கமாடடோம். மேலும் அங்கிருக்கின்ற குறைபாடுகளை மாணவர்கள் எங்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு அவர்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது. ஏனெனில் இந்த கல்லூரியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கே இருக்கின்றது.
இந்த கல்லூரியின் வளாகம் காடு மண்டிய நிலையிலும் நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாமலும் இருப்பதை காணமுடிகின்றது. நிர்வாகம் இன்னும் அக்கறையாக செயற்பட வேண்டும்.
நிருவாகம் ஏனோதானோ என்ற நிலையில் செயற்பட முடியாது. அவர்களுக்கு முழுமையான பொறுப்பு இருக்கின்றது. ஏனைய கல்லூரிகளின் நிலை இவ்வளவு மோசமாக இல்லை. இங்கு இருக்கின்ற மாணவர்களும் கல்லூரியின் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். இது உங்களுடைய சொத்தாக நீங்கள் கருத வேண்டும். இங்கு நடக்கின்ற இந்த விடயங்கள் தொடர்பாக மிகவிரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன்” என்றார்.