குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம்
உலகளவில் குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் புகழப்படும் முகமது அலி இன்று சனிக்கிழமை மரணமானார்.
அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 74 ஆவது வயதில் மரணமடைந்தார்.
பார்கின்சன் எனும் நோயால் 1980 ஆம் ஆண்டுபாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளுக்கும் உள்ளானார். இந்நிலையில் அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை சுவாசம் தொடர்பான பிரச்சினையும் ஏற்பட்டது.
இதனால், அமெரிக்காவின் போனிக்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அலி அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, அவரின் உயிர் பிரிந்தது.
முகமது அலி – தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தவராவார். அவர் தனது இளமை காலங்களில் கலந்து கொண்ட 61 போட்டிகளில் 56 இல் வெற்றிகளை குவித்தார்.
மேலும் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 05 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.
1981 ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற முகம்மது அலி, அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.