கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை விதிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு கிடையாது என, சுகாதார அமைச்சரும் அமைச்சரைவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஒரு முஸ்லிம் என்பதனால்தான் இவ்விடயம் பெரிதுபடுத்தப்பட்டது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி ஒருவருக்கு தடைகளை பிறப்பிக்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு வரமுடியாது என்றோ, ராணுவ முகாம்களுக்குள் அவர் நுழையக் கூடாது என்றோ தடைகளை பிறப்பிக்கும் அதிகாரம் முப்படையினருக்கு இல்லை.
பாதுகாப்பு அமைச்சுக்கு கூட அவ்வாறு தடைகளிட முடியாது. அவ்வாறு முடியும் எனில் நாமும் தற்போது பலருக்கு தடைகளை விதித்திருப்போம்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கடிதமொன்றின் மூலம் தனது விளக்கத்தைய தெரியப்படுத்தியுள்ளார்” என்றார்.