ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், தனக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவினையோ, அமைச்சுப் பதவினையோ கோரவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயங்கள் குறித்து பேசாத நிலையில், சில ஊடகங்கள் இப்பதவிகளை தான் கோரியதாக தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மு.காங்கிரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு இடையில் நிலவி வரும் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இருவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
இது தொடர்பாக ஹசனலி மேலும் கூறுகையில்;
“நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அமைச்சுப் பதவியும் கட்சிப்பிரச்சினையல்ல. அது தலைவருக்கும் எனக்குமுள்ள பிரச்சினையாகும். இப்பிரச்சினைகள் எங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின்போது பேசப்படவில்லை.
செயலாளர் பதவி பற்றியே பேசினோம். செயலாளரின் அதிகாரங்கள் பற்றி பேசினோம். தலைவரினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு மெளலவிகளையும், மீண்டும் கட்சியின் உயர்பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் முற்றாக முடியவில்லை. பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழு, நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை அமுல்படுத்த வேண்டியுள்ளது” என்றார்.