பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு
🕔 May 23, 2016
– க. கிஷாந்தன் –
பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் தற்பொழுது தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இத்தோட்டத்தில் 06, 07 மற்றும் 08 ஆகிய இலக்க லயத் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்பு பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழ கூடிய அபாய நிலை காணப்படுகிறது.
இதனால், 06ஆம் இலக்க லயத்தொகுதியில் 10 குடும்பங்களும், 07ஆம் இலக்க லயத்தொகுதியில் 07 குடும்பங்களும், 08ம் இலக்க லயத்தொகுதியில் 10 குடும்பங்களும் மற்றும் இரண்டு தற்காலிக கூடாரங்களில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களும் அடங்கலாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் இவ்வாறு தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களில் 35 சிறுவர்களும், இரண்டு 06 மாத குழந்தைகளும் அடங்குகின்றனர்.
இவர்களுக்கு நிவாரண உதவிகள் பலராலும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், தங்கி இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது..
பாதிக்கப்பட்ட மக்களை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டார். இதன்போது, தங்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.