வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது
வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கியமையினை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து குறித்த வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை சிலர் கொள்ளையிட்டு வருகின்றனர்.
அவ்வாறானவர்களில் 15 பேரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விலை கொடுத்து வாங்குகின்றவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், படையினரும் நிவாரணம் பணியாளர்களும், இவ்வாறான கொள்ளை நடவடிக்கைகள் இடம்பெறுவதை பெருமளவில் தடுத்து வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், தமது வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ள போதும் – அங்கிருந்து வெளியேறுவதற்கு அநேகமான மக்கள் அச்சப்படுகின்றனர். தாம், வீடுகளிலிருந்து வெளியேறிய பின்னர், அங்கிருக்கும் பொருட்கள் கொள்ளையடிக்கப்படலாம் என்பதாலேயே அவர்கள் வெளியேற அச்சப்படுகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளையும், அங்கிருக்கும் பொருட்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.