தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று மாலை முடிவு
இந்தியாவின் தமிழகத்தினுடைய அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை தொடங்குகின்றன.
அந்தவகையில், தமிழகத்திலுள்ள 232 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிந்த 232 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 16ஆம் திகதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் இடங்களில், இன்று காலை 08 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடங்கி, பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
வாக்கு எண்ணும் பணியில் 9621 அதிகாரிகள் செயற்படவுள்ளனர்.