
உலகில் நான்கு, ஐந்து பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அரியவகை நோயொன்றினால், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிதி அக்தர் எனும் ஏழைச் சிறுமியொருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
12 வயதான மேற்படி சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன.
பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ‘ஓநாய் நோய்’ என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.
பிறக்கும்போதே இவரது முகத்தைச் சுற்றி ரோமங்கள் வளர்ந்து காணப்பட்டது. பின்னர் உடல் முழுவதும் முடி வளர ஆரம்பித்துள்ளது.
குழந்தை வளர்ந்தால் இந்தக் குறைபாடு சரியாகிவிடும் என பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், பிதி அக்தர் வளர வளர அவருடன் ரோமங்களும் உடல் முழுதும் வளரத் தொடங்கியது.
அத்துடன் அவரது ஊனும் வளர்ந்து வீங்கிக் காணப்பட்டது.
இதனால் அந்த சிறுமி தன்னுடைய உடலை முழுவதுமாக மூடிக்கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவரது தந்தைக்கு வருமானம் அதிகம் இல்லாததால் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் அம்மா கூறுகையில், ‘‘அவள் பிறக்கும்போது கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்தோம். ஆனால், ஒவ்வொரு நாளும் வலியுடன் வாழும் எனது குழந்தையை நீண்ட காலம் என்னால் பார்க்க முடியாது’’ என்றார்.
உலகத்தில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் இதுபோன்ற விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.



