பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
– க. கிஷாந்தன் –
நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக இந்த செயற் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அந்தவகையில் ஹட்டன் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின், தரம் ஒன்றில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு, அப்பியாச கொப்பிகள் மற்றும் புத்தக பைகள் உள்ளிட்ட உபகரணங்கள் இன்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிறி முனசிங்க தலைமையில் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஹட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர, உயர் பொலிஸ் அதிகாரிகள், ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோட்டன்பிரிட்ஜ், வட்டவளை, நோர்வூட் மற்றம் கினிகத்தேனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.