மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் அகற்றப்படவுள்ளது; அமைச்சர் ஹரிசன்
ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார்.
எதிர்வரும் வியாழக்கிழமை முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டமையினால், கடந்த காலங்களில் மத்தளை விமான நிலையத்தில் நெல்லினை களஞ்சியப்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டதோடு, விமானநிலைய அதிகாரிகளினதும், சுங்கத்திணைக்களத்தினதும் அனுமதியின்றி நெல்லை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அங்கிருந்து நெல்லை அகற்றி தனியார் கஞ்சியசாலைகளில் அவற்றை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதேவேளை, இதுவரை காலமும் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமைக்கான கட்டணத்தை மத்தள விமான நிலையத்துக்குச் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் பாரிய நிதியுதவியின் கீழ், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில், விமான போக்குவரத்து இடம்பெறாத காரணத்தால் அதன் சேவைகள் முடக்கப்பட்டன.
எனினும், இடையிடையே மத்தளையில் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.