சாராவுக்கு என்னானது: விடைகாண, சாய்ந்தமருதில் உயிரை மாய்த்துக் கொண்ட சஹ்ரான் கும்பலின் சடலங்கள் தோண்டியெடுப்பு

🕔 April 27, 2022

– பாறுக் ஷிஹான் –

ஸ்டர் தினத் தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று புதன்கிழமை (27) காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டன.

அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யு.யு. தினுகா மதுசானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் ரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க, தடயவியல் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் பிரசன்னத்துடன் சடலங்கள்  தோண்டி எடுக்கப்பட்டன.

கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் கஸ்தூன் என்பவரின் மனைவி சாரா ஜெஸ்மின் எனப்படுகின்ற புலஸ்தினி மகேந்திரன் என்பவர் தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைக்காக மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தொடர் தாக்குதல்களின் பிரதான சந்தேக நபரான சஹரான் ஹசீமின் சகோதரரால் 26.04.2019 அன்று இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 

ஈஸ்டர் தின தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சாரா ஜஸ்மின் இறந்ததாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், அவர் தொடர்பான  விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சாராவை அடையாளம் காண  உடல் உறுப்புகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் என வெளியிடப்பட்ட பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு

  • முஹமட் ஹாசீம் முகமட் றில்வான்  (சஹ்ரானின் சகோதரர்)
  • முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)
  • முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னி/முகமட் சின்னா மௌலவி (சஹ்ரானின் சகோதரர்)
  • ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் (ஜெய்னியின் மனைவி)
  • ஹயாது முஹமட் ஹாசீம் (சஹ்ரானின் தந்தை)
  • அப்துல் சத்தார் சித்தி உம்மா (சஹ்ரானின் தாய்)
  • முகமட் ஹாசீம் ஹிதாயா (சஹ்ரானின் சகோதரி)
  • இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (றில்வானின் மைத்துனரும், ஹிதாயாவின் கணவருமாவார்)
  • அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)
  • மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)
  • அகமதுலெப்பை முகமட் நியாஸ் (தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)
  • முகமட் றில்வான் மீரா (றில்வானின் மகள்)
  • முகமட் றில்வான்  மருவான் சஹீட் ( றில்வானின் மகன்)
  • முகமட் ஜெய்னி அமாயா (ஜெய்னியின் மகள்)
  • முகமட் இமாம் ஹாசிம் (ஜெய்னியின் மகன்)
  • முகமட் சஹ்ரான் வாசீட் (சஹ்ரானின் மகன்)
  • மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை
  •  இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்
  •  முகமட் சஹ்ரான் ருசைதா (சஹ்ரானின்  மகள்)
  • அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா (சஹ்ரானின் மனைவி)

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல்  இடம்பெற்று கடந்த 26.04.2022ஆம் திகதியுடன் 03 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சாய்ந்தமருதில் இறந்த 17 பேரின் உடற் பாகங்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மரபணுக்களுடன் ஒப்பீடு செய்ததில், சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் உடவினர்களின் டிஎன்ஏ, குறித்த சடலங்கள் எவற்றின் டிஎன்ஏ களுடனும் பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து,  சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி தப்பி சென்றுள்ளாரா என சந்தேகம் எழுப்பப்பட்டு சர்ச்சைகளும் நாளுக்கு நாள் நீடிக்கின்றன.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற பின்னர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பகுதியில் மேற்படி தற்கொலைக் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பகுதி வீடு ஒன்றை வாடகை்குப் பெற்றிருந்த சஹ்ரான் ஹசீமின் தம்பி உள்ளிட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இதன்போது சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் அவரின் மகள் சம்பவ இடத்திலிருந்து உயிருடன் ராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்