நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர்

🕔 December 13, 2015

Rahmath Mansoor - 0075
“சி
றிது காலம் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர், சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினரோடு இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், மீண்டும் தலையெடுத்து விடலாம் என்றும், நாட்டில் இனவாதத்தினை மீளவும் சூடுபடுத்தலாம் எனவும் நினைத்துக் கொண்டு, சில மட்ட ரகமான முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்” என்று முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை, கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல், முஸ்லிம் சமுகத்தின் மீது ஞானசேர தேரர் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, அவர் இவ்வாறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் ரஹுமத் மன்சூர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இணைப்பாளர் ரஹ்மத் மன்சூர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான சமத்துவம் பேணப்பாடாமையால் ஏற்பட்ட முரண்பாடுகள், காலவோட்டத்தில் சிறுபான்மை இனங்களை அடக்குமுறைக்குட்படுத்தி அரசாட்சி புரியவேண்டும் என்ற வன்மமான சிந்தனைகளுக்கு வித்திட்டன. இதன் விளைவாக, ஆறுதசாப்த காலமாய் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் புற்றுநோய் போல் வளர்ந்துள்ளதோடு, அவலங்களும் இழப்புக்களுமே எஞ்சியிருக்கின்றன.

நாட்டில் ஆயுதக் கலாசாரத்தால் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, சமத்துவத்தினைப் பேணி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை கண்பதற்காக நல்லிணக்கத்தை உருவாக்குவதே இறைமையுள்ள அராசங்கத்தின் கடமையாகும்.

ஆனால், அந்தக் கடமையை செய்வதிலிருந்து முன்னாள் ஆட்சியாளர்கள் முற்றுமுழுதாக விலகியிருந்னர். சர்வாதிகார குடும்ப ஆட்சியை வலுப்படுத்தி, சிறுபான்மை இனங்களை அடக்குமுறைக்குள்ளாக்கி, ஊழல் நிறைந்த அபிவிருத்தியை முன்னெடுத்து முழு நாட்டையும் அபகரிக்கும் திட்டங்களுக்கே அவர்கள் முன்னுரிமையளித்தனர்.

இதற்காக பொதுபலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்களை உருவாக்கி, அதன் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடமளித்திருந்தனர்.

குறிப்பாக தமிழ் மக்களை யுத்தத்தில் தோல்வியடைச்செய்து விட்டோமென மார்பு தட்டிக்கொண்டிருந்த பௌத்த சிங்கள இனவாதிகள், மற்றொரு தேசிய இனமான முஸ்லிம்களை இலக்குவைத்தனர்.

இதன் நிமித்தம், தம்புள்ளை பள்ளிவாயலில் தமது இனவாதச் செயற்பாடுகளை ஆரம்பித்தவர்கள், அளுத்கம வரை சென்று உயிர்ப்பலி எடுத்தனர். உணவு, உடை, சமயம் மற்றும் கலாசாரம் போன்ற ஒரு மனித சமூகத்தின் அடிப்படை சுதந்திரங்களை மறுதலிக்கும் செயற்பாடுகளை மேற்படி இனவாதிகள் முன்னெடுத்தார்கள். முஸ்லிம் சமுகத்தின் தேசிய அரசியல் சக்தியான முஸ்லிம் காங்கிரஸ் மீது வீண்பழிகளைச் சுமத்தி, அவமானப்படுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்கள்.

ஆயினும், முஸ்லிம்கள் பொறுமைக் கடைப்பிடித்தனர். இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தால் வன்முறை வெடித்துவிடக்கூடாது என்பதற்காக, அமைதி பேணினர். பேச்சுவார்த்தைகளுடாகவே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கும், பெரும்பான்மை சமுகத்திற்கும், பௌத்த சிங்கள இனவாதத்தை வலிமையாக முன்னெடுத்த தரப்புக்களுக்கும் முஸ்லிம்கள் எடுத்துரைத்தனர்.

இருப்பினும் எந்தப்பயனும் ஏற்படவில்லை. கடைசியில், ஆட்சிமாற்றமே இதற்கு முடிவாகும் என்பதை சிறுபான்மை சமுகங்கள் வலுவாக உணர்ந்தனர். சிறுபான்மை சமுகங்களின் தேசிய அரசியல் கட்டமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சியின் பங்காளர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளன.

சிங்கள பௌத்த இனவாதத்தை மக்கள் மனதில் விதைத்து, ஆட்சியில் அமர்ந்து விடலாமென நம்பிய முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களின் துணைக்குழுவினரான பொதுபலசேனாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக பொதுபலசேனவை பெரும்பாமை மக்களே பொருட்படுத்தாது, தேர்தலில் செயற்பட்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் இதனைப் பிரதிபலித்திருந்தது. இவ்வாறான நிலையில், புதிய ஆட்சியில் தமது இனவாத கருத்துக்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மட்டார்கள் என்பதை துல்லியமாக புரிந்து கொண்ட பொதுபலசேனாவினர், அடுத்தகட்டம் என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறிக்கொண்டிருந்தனர்.

கடந்த காலத்தில், எல்லை மீறிய செயற்பாடுகளால் குற்றவாளிகளாக கருத்தப்பட்டவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்திருந்த போதும், தற்போது அவ்வாறான நிலைமைகளுக்கு சந்தர்ப்பம் இல்லை.

இந்த நிலையில், சிறிது காலம் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர், சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினரோடு இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், மீண்டும் தலையெடுத்து விடலாம் என்றும், நாட்டில் இனவாதத்தினை மீளவும் சூடுபடுத்தலாம் எனவும் நினைத்துக் கொண்டு, சில மட்ட ரகமான முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், இந்நாட்டின் தேசிய இனமான முஸ்லிம் சமுகத்தின் மீது மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி, மிலேச்சத்தனமான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

பிரான்ஸில் நடந்த ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் இலங்கையின் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று, ஐ.எஸ். அமைப்பினையும் இலங்கை முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி ஞானசார தேரர் கூறியிருந்தார்.

மேலும், முஸ்லிம் மக்களுக்கு மதத்தீவிரவாத கற்கை நெறிகள் போதிக்கப்பட்டு, அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின்விளைவுகளை இலங்கையிலள்ள முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ளநேரிடும் என்றும், குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவும் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் குருணாகல் பரகாதெனிய பிரதேசம், மாவனெல்லை மற்றும் மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மதரசா என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மத தீவிரவாதத்தை பரப்பி வருவதாகவும் ஞானசார சொன்னார்.

இந்த சூழ்நிலையானது, எமது நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும், ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள், முஸ்லிம் தரப்பிலிருந்து உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் பொதுபலசேனாவின் செயலாளர் விபரித்திருந்தார்.

தற்போதைய நிலையில், முஸ்லிம்கள் அச்சுறுத்தல்களோ நெருக்கடிகளோ இன்றி இன நல்லிணக்கத்துக்காக ஏகோபித்து செயற்பட ஆரம்பித்திருக்கும் வேளையில், ஞானசார கூறியிருக்கும் மேற்படி கருத்துக்களை அபத்தம் நிறைந்தவையாகும்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல், முஸ்லிம் சமுகத்தின் மீது ஞானசார தேரர் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

மேலும் ஞானசார தேரர் இந்நாட்டின் தேசிய இனமான முஸ்லிம் சமுகத்தின் கடந்த கால வரலாற்றை மறந்தே பேசுகின்றார் என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி சண்டையிட்டபோது, அதன் பங்காளர்களாக முஸ்லிம்கள் முழுமையாக இணைந்திருந்தால் தற்போது நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஞானசார தேரர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் வன்முறைகள் நிகழ்வதையோ, குருதி சிந்துவதையோ முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவுமில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. இந்த உண்மை ஞானசார தேரருக்கும் அவர் சார்ந்த அமைப்பினருக்கும் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

எனவே, இத்தகைய பின்னணியில் வெறுமனே முஸ்லிகளையும், அதன் தேசிய அரசியல் கட்டமைப்பான மு.கா.வையும் மையப்படுத்தியதாக வெளிப்படுத்தப்பட்டு வரும், இவ்வாறான கருத்துக்களை அரசியல் ரீதியான காழ்பபுணர்ச்சியின் அதியுச்ச வெளிப்படாகவே கருதவேண்டியுள்ளது.

எனவே, ஐக்கிய இலங்கைக்குள் மூவினங்களுக்குடையிலான நல்லெண்ணம் கட்டியெழுப்பப்பட்டு, நிரந்தர சமாதனம் நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையினையாவது புரிந்து கொண்டு, பொதுபலசேனா அமைப்பினரும், இனவாதத்தை கையிலெடுத்து சுயநல அரசியல் செய்ய விளையும் சக்திகளும் தமது சிந்தனைகளையும் செயற்பாட்டு போக்கையும் மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.

அவ்வாறு மாற்றியமைக்காமல் விட்டால், பௌத்த சிங்கள மக்களே இவர்களுக்கு தக்க படிப்பினைகளை எதிர்காலத்திலும் வழங்குவார்கள் என்பது திண்ணம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்