பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு
– க. கிஷாந்தன் –
பாவனைக்குதவாத நிலையில் இருந்த பெருந்தொகையான ஐஸ்கீரிம் வகைகளை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றிய பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், அவற்றினை அழித்துள்ளனர்.
மேற்படி ஐஸ்கீரிம் வகைகளை விற்பனைக்காக கொண்டுச் சென்ற வாகனமொன்றினை, டிக்கோயா புளியாவத்தை நகரில் வைத்து, பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஐஸ்கீரிம் வகைகள் டிக்கோயா புளியாவத்தை நகரில் விற்பனை செய்யப்பட்ட நிலையிலேயே அவை கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஐஸ் கிறீம் வகைகள் சுமார் 50,000 ரூபாய் பெறுமதியானவை என தெரியவருகிறது.
‘ஐஸ்கீரிம், யோகட் போன்ற உணவுப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்லும்போது, வாகனத்தில் இருக்கின்ற குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டல் தன்மை காணப்பட வேண்டும். ஆயினும், மேற்படி கைப்பற்றப்பட்ட வாகனத்தில் ஐஸ்கிரீம் வகைகள் காணப்பட்டபோதிலும், அவை உரிய முறையில் குளிரூட்டப்படாத நிலையில் இருந்தன. ஆகவே, அவை மக்கள் பாவனைக்கு உகந்ததாக இல்லை என்பதை அறிந்த பின்னரே, அவற்றினை அழிக்கப்பட்டதாக’ பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பி.கே.வசந்த தெரிவித்தார்.
மேலும், மக்கள் இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.