மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர்
வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவதுவாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கை, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தௌபீக்குக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் பிரதித் தலைவர் பதவிகளில் இருந்தும், பைசல் காசிம் – பிரதி தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கட்சியின் தீர்மானத்தை மீறி, ஆதரவாக மேற்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். அதன்போது, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தௌபீக் தவிர்ந்து கொண்டார்.