பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட
🕔 August 30, 2021
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மிலிந்த மொரகொட இந்தப் பதவிக்கு 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிடட்டுள்ள அறிக்கையொன்றில்; அமைச்சரவை அந்தஸ்துடன் நியமிக்கப்பட்ட மொரகொட, உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று (30) நடைபெற்ற எளிமையான நிகழ்வுடன் கடமைகளை பொறுப்பேற்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய புதிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட; இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதற்கும் இலங்கை – இந்திய உறவுகளை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கும் ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.