புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம்

🕔 July 16, 2021

– றிப்தி அலி –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரப்பட்ட விண்ணப்பத்துக்கு, கடந்த ஜுன் 30ஆம் திகதி ஆவணங்களின் ஊடாக ஆணைக்குழு பதிலளித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி, பொல்கொல்லயில் இடம்பெற்றது.

இந்த பேராளர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெற வேண்டிய கட்டாய உயர்பீடக் கூட்டம் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில்; 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்ட 99 அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை போராளர் மாநாட்டில் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்டது.

இதற்கமைய, கட்சியின் பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களின் அந்த விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். அஸ்லம், பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், பிரதித் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், பிரதிப் பொருளாளராக எம்.சீ. எஹியா கான், போராளர் செயலாளராக முன்னாள் மாகண சபை உறுப்பினர் அஹமட் ஹை, கல்வி மற்றும் கலாசார விவகார இணைப்பாளராக முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

எனினும் இந்த புதிய தெரிவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

மாறாக 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில் கட்சியின்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவூத்தர் நெய்னா முஹம்மது – சிரேஷ்ட பிரதித் தலைவர் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். அஸ்லம் – பொருளாளர் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் – பிரதி தேசிய அமைப்பாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கட்சியின் பிரதி பொருளாளர் பதவி வெற்றிடமாக காணப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த போராளர் மாநாட்டுக்கு முன்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம். மாஹீர் மற்றும் எஸ்.எல்.எம். பழீல் ஆகியோர் தொடர்ந்தும் கட்சியின் நிர்வாக உறுப்பினர்களாக செயற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க ஐ.எம். மாஹீர் – அக்கட்சியின் போராளர் செயலாளராகவும் எஸ்.எல்.எம். பழீல் – அக்கட்சியின் கல்வி மற்றும் கலாசார விவகார இணைப்பாளராகவும் செயற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகயீனம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹம்மது, கடந்த போராளார் மாநாட்டுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து அப்பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். அஸ்லம் தெரிவுசெய்யப்பட்ட போதிலும், இதுவரை ராவுத்தர் நெய்னா முஹம்மதின் பெயரே சிரேஷ்ட பிரதித் தலைவர் என தேர்தல் ஆணைக்குழுவில் காணப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டமையினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் இரண்டு கட்சிகளின் உறுப்பினராக செயற்படுகின்றார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் செயலாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, சமய மற்றும் கலாசார விவகார பணிப்பாளரகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரை நாம் தொடர்புகொண்டு வினவினோம்.

‘குறித்த போராளர் மாநாடு நிறைவடைந்த பின்னர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவிட்டேன்’ என அவர் தெரிவித்தார்.

‘எனினும், போராளர் மாநாட்டு அறிக்கை இதுவரை அனுப்பப்படவில்லை. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஞாபகமூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அந்த அறிக்கை அனுப்பப்படும்’ என ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்