மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு

🕔 June 30, 2021

த்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்படவிருந்த தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு நாளை 01ஆம் திகதி தொடக்கம் விதிக்கப்படவிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, மேற்படி நாடுகளிலிருந்து இலங்கை வருபவர்கள் அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அதற்கமைவான QR மற்றும் Bar குறியீடுகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அன்டிஜன் பரிசோதனை அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளிடமும், தங்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும் என்றும், பயணி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் பரிசோதனை அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து, விமான சேவை நிறுவனம் திருப்தியடைய வேண்டும் என்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்