பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் ரத்துச் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இலங்கையின் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன்தான் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளது. அதை நீக்குவதா? இல்லையா? என்பதை இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்க முடியாது.
நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றபடியால் தான், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் அதற்குத் துணைபோனவர்களையும் கைது செய்தோம். தற்போதும் கைது செய்து வருகின்றோம்.
இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்துவது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்.
சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம்” என கூறியுள்ளார்.
தொடர்பான செய்தி: பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது விட்டால், ஜி.எஸ்.பி.ப்ளஸ் இல்லை: இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்