சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு

🕔 May 31, 2021

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு, இந்த கொள்கை மாற்றத்துக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் மக்கள்தொகை – கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்தது.

அந்த தரவு ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, சீன அரசு அந்நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அதாவது, சீனாவில் குழந்தைகளின் பிறப்பு குறைவதால், நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை இளம் வயதினரை விட அதிகமாகும் கவலை எழுந்தது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடுமுழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் கட்டுப்பாடு, கடந்த 2016ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டு, அந்த எண்ணிக்கை இரண்டாக மாற்றப்பட்டது.

எனினும், கொள்கை ரீதியிலான மாற்றம் தவிர்த்து பெரியளவிலான ஊக்குவிப்பு திட்டம் ஏதுமில்லாததால் இந்த திட்டம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

சீனாவின் முக்கிய நகரங்களில் குழந்தையை பெற்றெடுத்து, வளர்ப்பதற்கு ஆகும் செலவு தொடர்ந்து உயர்ந்து வருவது, தம்பதியினர் இடையே குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமின்மையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், முந்தைய திட்டத்தை போன்று இந்த திட்டமும் தோல்வியடைவதை தவிர்க்கும் வகையில், எண்ணற்ற திட்டங்களை சீன அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

சீனாவின் தற்போதைய சனத்தொகை சுமார் 144 கோடியே 44 லட்சம் ஆகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்