பலஸ்தீனுக்கு சீனா நிதியுதவி: கொவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாக அறிவிப்பு
பலஸ்தீனுக்கு உடனடி உதவியாக பத்து லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பலஸ்தீன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்துக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களையும் இலங்கை பெறுமதியில் சுமார் 20 கோடி ரூபா), இரண்டு லட்சம் கோவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனா அதன் திறனுக்குள் தொடர்ந்து மனிதாபிமான ஆதரவை வழங்கும் என்றும் பாலஸ்தீனிய தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ப காசாவின் புனரமைப்பில் தீவிரமாக பங்கேற்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனுக்கான ஆதரவு நாடாகவுள்ள சீனா, இஸ்ரேலுடன் உறவுகளைப் பேணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
10 நாட்களாக பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் நடைபெற்று வந்த சண்டை, கடந்த 21ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
இந்த சண்டையில் காசாவில் 232 பேர் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை இழந்தனர்.
தொடர்பான செய்தி: இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு