சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம்

🕔 March 31, 2021

– எம்.எம். ஜபீர் –

ம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பான புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்

தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ. அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஆர்.வளர்மதி, ஏ.எம்.எம். றியாஸ், ஏ.எல்.எம். ஜிப்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக வளத்தாப்பிட்டி 10ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு உப தவிசாளராகவும் பதவிவகித்து அதன் பின்னர் உறுப்பினராக பதவி வகித்து வந்த வெள்ளி ஜெயச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கணேசசுந்தரம் குலமணி அக்கட்சியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த கணேசசுந்தரம் குலமணிக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட், பிரதேச சபை உறுப்பினருக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களையும் வழங்கி வைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்