பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

🕔 January 19, 2021

– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் –

ற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள் காணப்படுகின்றன” என, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அதனால்தான், மாகாண சபை முறைமையை எப்போதும் – தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் றிசாத் ஏ காதருக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அந்தப் பேட்டியின் முழு விவரம் வருமாறு;

கேள்வி: 13வது திருத்தம், மாகாண சபை முறைமை இலங்கைக்குத் தேவையற்றது என்ற கருத்துகளை நீண்ட காலமாக கூறி வருகின்றீர்கள். ஆனால் அண்மையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் 13வது திருத்தம், மாகாண சபை முறைமைகளை வலுப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. இது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

பதில்: இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எங்களது உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வது நல்லதல்ல. இந்தியா எமது நேச நாடு. இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இலங்கை ஒரு சுயாதீன இறைமை உள்ள நாடு. 13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதா, இல்லையா என்பதனை தீர்மானிப்பது இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளேயன்றி வெளிநாட்டிலுள்ள அரசியல்வாதிகளல்ல. இல்லாத பிரச்சினை ஒன்றினை உருவாக்குவதற்கே முனைகின்றனர்.

மாகாண சபை முறைமையை நான் எதிர்ப்பதற்குக் காரணம் இலங்கையின் ஒற்றையாட்சி முறைமை இல்லாமலாக்கப்படுகின்றது என்பதனால். ஒற்றையாட்சி நாட்டில் ஒரே சட்டம் அமுலில் இருக்கவேண்டும். ஆனால் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது சட்டங்கள் அமுலில் உள்ளன. இனத்துவ அடிப்படையில் மாகாணங்களை பிரிப்பது நல்லதல்ல. இதனால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

இந்தியாவும் காஷ்மீர் விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டது என்பது எமக்கு ஞாபகமிருக்கின்றது.

ஆகவே இது விடயத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்க முடியாது. 13வது திருத்தத்திற்கு நான் அன்றும் எதிர்ப்பு, இன்றும் எதிர்ப்பு, நாளையும் எதிர்ப்பே.

கேள்வி: மாகாண சபை முறைமைக்கான எதிர்க் கருத்து வலுப்பெற்றதன் காரணமாகவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கு வருகை தந்ததாக சொல்லப்படுகின்றதே…

பதில்: நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர். இது அரசாங்கம் என்கிற வகையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம். அதனை எடுக்க வேண்டியவர் ஜனாதிபதி.

கேள்வி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நீங்கள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் புகைப்படங்களை வெளியிடுவதாக சொன்னது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டும் இருந்தன. நீதிபதிகள், நீதித்துறையுடன் தொடர்பான விடயம் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பானது நீதிக்கு புறம்பான விடயம் என்கின்ற விமர்சனம் எழுகின்றதே…

பதில்: ஒருபோதும் சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டுமென நான் குறிப்பிடவில்லை. நான் சொன்னது குற்றமிழைத்தவர்களை அடையாளம் கண்டு கொண்டதன் பிற்பாடு அவர்களின் முகங்களை வெளியிடுவது தொடர்பாகவே. உதாரணமாக எங்களுக்குத் தெரியும் சீ.சி.ரீ.வி கமராக்களின் மூலமாக கண்டு கொண்ட காட்சியொன்று. ஒருவரை வெளியே இழுத்து வந்து பொல்லுகள், இரும்புக் குழாய் மற்றும் கத்தியால் பலமாக தாக்குவதனை. அவர்களை எங்களுக்கு தெரியும்.

அவ்வாறான குற்றச் செயல்கள் செய்தவர்களை முழுச் சமூகங்களுக்கும் தெரியும். அவ்வாறானவர்களின் முகங்களையே (புகைப்படங்களை) நாங்கள் வெளியிட்டோம். நடுவீதிகளில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க கொலை செய்கின்றனர்.

மக்கள் முன்னால் பிழை செய்த ஒருவ,ர் நீதிமன்றில் நிரபாராதியாகின்றார் என்றால் அங்கே தவறொன்று இருக்கின்றது. மக்கள் முன்பாக குற்றமிழைத்த ஒருவரின் புகைப்படங்களை வெளியிடுவதனால் குற்றச்செயல்களில் ஈடுபடவுள்ளவர்கள் பயம், வெட்கத்தினால் அதிலிருந்து விலகுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளன.

வெட்கம், பயம்தான் குற்றச் செயல்களை தடுப்பது. வெட்கத்துடனும் பயத்துடனும் குழந்தைகளை வளர்க்கச் சொல்வது அதற்கே. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் வெட்கம், பயம் இல்லாதவர்கள். அதனை ஏற்படுத்துவதற்கே இந்த நடைமுறை.

கேள்வி: யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டு அமைதியின்மை ஏற்பட்டு மீளவும் அதனை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. அங்குள்ள நினைவுத் தூபி விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கானதல்ல, மாறாக யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களுக்கானவை என்கிற கருத்து சொல்லப்படுகின்றது. அதனை அகற்ற வேண்டும் என்பதற்கான நியாயங்கள் என்ன?

பதில்: அப்படியென்றால் வரவேற்கத்தக்க விடயம், ஆனால் அது அப்படியானதல்ல. நாங்கள் பயங்கரவாதிகளை நினைவு கூருவற்கு இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை. அதனை அங்குள்ள மாணவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நினைவுத் தூபி அமைப்பதனை வெட்கமாக கருத வேண்டும். தங்களுடைய மக்களையே கொலை செய்தவர்களுக்கு நினைவுத் தூபி கட்டுவதனையிட்டு வெட்கப்படுதல் வேண்டும்.

2001ஆம் ஆண்டு சமாதான காலப் பகுதியில் வடக்கின் கடற்டை கட்டளைத் தளபதியாக இருந்தேன். எனக்குத் தெரியும், அவர்கள் சிறுவர்களை அவர்களது படைக்கு எப்படி அழைத்துச் சென்றனர் என்று. அடுத்த நாள் காலையில் முகமாலையில் தாய்மார்கள் அழுது கொண்டு வன்னிக்கு செல்லும் வேன்களை எட்டி எட்டி பார்த்துக் கொண்டு நிற்பார்கள். எதற்காகவென்றால், அதற்கு முந்திய இரவு வீடுகளுக்குள் நுழைந்து பலாத்காரமாக அழைத்துச் சென்ற பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று பார்க்க.

பாடசாலைகளில் இருந்து ஆர்ப்பாட்டங்களுக்கு மாணவர்களை எடுக்கின்ற போது, அதற்கு எதிராகவுள்ள அதிபர்களை வீடுகளுக்குள்ளேயே சுட்டு சடலமாக்கினர். வெளிநாடுகளில் இருந்து அனுப்புகின்ற பணத்தை ஐம்பது வீதம் கப்பமாக பெற்றுக் கொண்டனர். மீனவர்களின் வருமானத்தில் ஐம்பது வீதத்தை கப்பமாக பெற்றனர். சில கடை முதலாளிகள் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு செய்த பயங்கரவாதிகளுக்காகவா அவர்கள் நினைவுத் தூபி அமைக்கின்றனர்? அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இரண்டு லட்சத்து தொண்ணூற்று ஐயாயிரம் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த போது, அம்மக்களை இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் வெளியே எடுத்தோம். அவர்கள் ராணுவத்தினரை நோக்கி சென்ற போது காவலரண்களுக்குள் இருந்து சுட்டுத் தள்ளினர். சின்னஞ் சிறுசுகளின் கால்களை வெட்டினர். இவ்வாறு செய்த புலிப் பயங்கரவாதிகளுக்காகவா நினைவுத் தூபி நிறுவ முற்படுகின்றனர்? அதற்காக அவர்கள் வெட்கப்படடுதல் வேண்டும். அவர்கள் வேறு நினைவுத் தூபிகளை நிறுவ முடியும். அவர்கள் வெட்கப்பட்டாலோ, இல்லையோ பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கேள்வி: உள்ளூராட்சி மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராகவிருந்த நீங்கள், மாகாண சபை முறைமைக்கு எதிர்க் கருத்துகளை கூறியதன் விளைவாக இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாகவே அந்தஅமைச்சு மீளப் பெறப்பட்டது என்கிற கருத்து நிலவுகிறதல்லவா?

பதில்: தற்போது நான் வகிப்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சுப் பதவி. எனக்கு வழங்கப்பட்டுள்ளது பலம் பொருந்திய அமைச்சு. இது எனக்கு தரப்பட்டுள்ளது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக. நாங்கள் என்னதான் செய்தாலும் பாதுகாப்புதான் முக்கியத்துவமிக்கது. மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற சூழலை உருவாக்குகின்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை எப்படியாவது நான் நிறைவேற்றுவேன்.

இது கஷ்டமான பணி என்பதனால்தான் ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்துள்ளார். கஷ்டமான பணிகளை மிகக் கஷ்டப்பட்டு நிறைவேற்றியவர்கள் நாங்கள். இதனையும் அதே போல் நிறைவேற்றுவேன். அடிப்படைவாதம், பயங்கரவாதத்துக்கு இடமில்லை. கப்பம் பெறுவோர், பாதாள கோஷ்டி மற்றும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை. நிறைய கொள்ளைகள் பதிவாகின்றன. அதனை நாளையாகும் போது நிறுத்துவேன்.

மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் கப்பம் பெறுவோர், பாதாள கோஷ்டியினர், போதைப்பொருள் வியாபாரம் செய்வோர் பற்றி அறிந்திருந்தால் தயவு செய்து 118 எனும் இலக்கத்திற்கு அறிவியுங்கள், உடனடியாக அதனை நிறுத்துவேன்.

கேள்வி: இலங்கை ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது எனும் குற்றச்சாட்டுகள் வலுப் பெறுகின்றதே… அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உலகிலேயே சக்தி வாய்ந்த பயங்கரவாத இயக்கத்துடன் படையினர் தங்களது வாழ்வை துச்சமென நினைத்து போராடும் போது அது நல்லது. ஆனால் நிருவாகம் செய்தால் மட்டும் நல்லதல்ல. என்ன வகையான புரிதல் இது? ஏன் இப்படியான கோபம்? மக்களுடைய வீடுகளை பாதுகாத்து, அவர்களுக்கு அச்சமற்ற வாழ்வை ஏற்படுத்தவென பயங்கரவாதிகளின் முன்னே நின்று போராடும் போது மட்டும் நல்லது. ஆனால் அமைச்சுக்களுக்கு செயலாளர்களாக நியமிப்பது நல்லதல்ல. என்ன விளக்கம் இது? எவ்வளவு தவறான புரிதல் இது.

அதாவது இலங்கை நிருவாக சேவையில் உள்ளவர்களைப் போன்று ராணுவத்தில் கடமையாற்றியவர்களுக்கும் தகுதி இருக்கின்றது. அவர்கள் லட்சக்கணக்கானவர்களை நிருவகித்தவர்கள். யுத்த காலத்தில் அவ்வாறு நிருவகிக்க முடியுமென்றால் சமாதான காலங்களிலும் அவர்களால் அதனை செய்ய முடியும். அவர்கள் யுத்த காலத்தில் செய்த அர்ப்பணிப்பான சேவையினை கௌரவப்படுத்தும் வகையிலே இப்பதவிகள் வழங்கப்படுகின்றன.

அதனால் இலங்கை நிருவாக சேவையினருக்கான வெற்றிடங்கள் குறையவில்லை. எல்லா இடங்களிலும் இலங்கை நிருவாக சேவையினர் இருக்கின்றார்கள். எங்காவது இல்லாமலில்லையே. இதனை அப்படிப் பார்ப்பதற்கு நான் பூரணமாக எதிரானவன். யுத்தத்திற்கு பொருத்தம் என்றால், ஏன் நிருவாக சேவைக்கு பொருத்தமில்லை?

கேள்வி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான தாங்கள், தேசத்து மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

பதில்: குற்றச் செயல்கள் செய்ததன் பிற்பாடு அதனை செய்தோர் நிச்சயமாக கைது செய்யப்படுவர். ஆனால் எங்களுக்குத் தேவை குற்றச் செயல்களை குறைக்க வேண்டும் என்பதாகும். கொலை, கொள்ளைகளை இல்லாமலாக்க வேண்டும்.

அதற்காக மக்களும் அறிவுரைகளை வழங்குதல் வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ராணுவ பயிற்சி வழங்குதல் சிறப்பு என்று நான் நினைக்கின்றேன். மனிதர்களிடையே ஒழுக்கம், பண்பு குறைந்துள்ளது.

இரண்டு கார்கள் மோதிக் கொண்டால் இரண்டு பேரும் அடித்துக் கொள்கின்றனர் அல்லது மாய்த்துக் கொள்கின்றனர். தாய்லாந்து போன்ற நாடுகளில் அவ்வாறல்ல, இருவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர்.

அதன் பிற்பாடே காப்புறுதி நிறுவனத்திற்குத் தகவல் வழங்குவர்.

எச்சந்தர்ப்பத்திலும் அவர்கள் அடித்துக் கொள்வதில்லை. எந்த ஒரு நிகழ்வுக்குச் சென்றாலும் நம்மவர்களுக்கு பொறுமை இல்லை.

ராணுவ பயிற்சியினால்தான் நல்ல பண்புகளை உருவாக்க முடியும். எல்லோருக்கும் ராணுவ பயிற்சி வழங்குவதனால், மேற்சொன்ன நல்ல பண்புகளை ஏற்படுத்த முடியும் என்று நான் ஆலோசனை வழங்குகின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்