பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 November 30, 2020

கொரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 03 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களை அவர் கூறினார்.

“கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட சிலர், அதனை புறக்கணித்து வருவதாகவும், அவ்வாறானவர்களுக்கு சிலர் உதவுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இத்தகைய நபர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி ‘பி ‘அறிக்கை தயாரித்து அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நபர்களுக்கு இணையத்தின் ஊடாக உதவி ஒத்துழைப்புகளை வழங்கிவரும் நான்கு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை  எடுப்பதுடன், இதன் போது குற்றம் நிரூபிக்கப்படும் இரு தரப்பினரையும் மூன்று வருடங்கள் வரை சிறை வைக்கவும் முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்