மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம்

🕔 November 8, 2015
Meteorite - 01லங்கையின் தென்பகுதிக் கடலில், விண்வெளியிலிருந்து மர்மப் பொருளொன்று விழும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமான 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 02 மீற்றர் நீளமான WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்குத் தெற்கில், 100 கி.மீ தொலைவில், கடலில் விழும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி, காலை 11.48 மணியளவில், இந்தப் பொருள் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மர்மப் பொருளினால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அது வளிமண்டலத்துக்குள் நுழையும் போது, பெரும்பாலும் நடுவானிலேயே எரிந்து போய் விடும் சாத்தியம் உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் துறைத் தலைவர் கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிய துண்டுகள் நிலத்தில் விழுவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது என்று, ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின், மூத்த ஆய்வாளரான விஞ்ஞானி சரோஜ் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

எல்லாப் பகுதிகளும் எரிந்து போகத் தவறினால், சிறிய துண்டுகள் நிலத்தை வந்தடைய சந்தர்பங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்தர் சி கிளார்க் நிலையம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை தெற்கு கடல் பகுதியில் விமானங்கள் பறப்புக்குத் தடைவிதிப்பது குறித்து அவதானித்து வருவதாக, விமான சேவைகள் கட்டுப்பாட்டாளர் கிரிசாந்தி திசேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை, அந்தப் பகுதிகளில் மீன்பிடித் தடையை நடைமுறைப்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளதாக, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பெர்னான்டோ கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்