நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

🕔 October 30, 2020

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வியாழக்கியமை பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 05 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை – ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரும் பிரதமராலும், எதிர்க் கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.

அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்