அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம்

🕔 April 6, 2020

ரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கொரோனா நோய்க்கிருமி நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரிவாக விளக்கியதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் தாம் செயற்பட்ட விதம் குறித்து இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக தாம் உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதனை இங்கு ஜனாதிபதி விவரித்தார்.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன எனக் கூறிய ஜனாதிபதி, நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் தொற்றுப் பரவுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்ததுடன், நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பினையும் ஜனாதிபதி பாராட்டினார்.

இந்தச் சந்திப்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துப் பரிமாறிக்கொண்டதாகவும் ஜனாதிபி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதயின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியேரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்