சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு

🕔 October 26, 2019

கரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல், மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை ஏ.எம். ஜெமீலின் இல்லத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மரைக்காயர் சபை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என்பதை கலந்துரையாடலில் ஈடுபட்ட மரைக்காயர் சபை உறுப்பினர்கள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறுகையில்;

“சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக தனித்துப் போட்டியிட்டது. அதற்கு மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன்மூலம் கல்முனையில் ஏற்பட்ட சரிவை கட்சி தாங்கிக்கொள்ளும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை சாய்ந்தமருதுக்கு கூட்டிவந்து, விரோத சக்திகளுக்கு துணைபோனமை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் செயலாகும். அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

சாய்ந்தமருது நகரசபை குறித்து ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கு அவர்கள் தருவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். மாற்று சக்திகள் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்சினையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது. நகரசபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதி ஒருநாளும் பெறுமதியற்றுப்போக முடியாது.

சாய்ந்தமருதில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்களையும் நாங்கள் புறந்தள்ள முடியாது. நாங்கள் பிரிந்துகொண்டு தீர்வுகளை நோக்கி வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியாது. முதற்கட்டமாக நாங்கள் ஒற்றுமைப்பட்டு அதிகாரங்களை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எங்களுக்கிடையிலான அதிகார ரீதியிலான சமன்பாட்டை சரிசெய்துகொள்ள முடியும்.

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எங்களுக்குள் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சினைக்காக, முழு சமூகத்தையும் பாதிக்கும் வகையில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வது எங்களை பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடும். அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுவதே ஆரோக்கியமான விடயமாகும் என்றார்.

இச்சந்திப்பில் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், எம்.எஸ். உதுமாலெப்பை, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கட்சியின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்