பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

🕔 October 20, 2019

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில்  அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஜனாதிபதி  வேட்பாளர் சஜித்தை ஆதரித்து முதல் முதலாக நான் பிரசாரம் செய்யும் பொது மேடை இதுவாகும். முஸ்லிம் சமூகத்திற்கும் எங்களுக்கும் பிரச்சினை வந்த போது, துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட்ட இந்த பிராந்திய மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலயேதான் இனவாதிகள் ஈஸ்டர் தின தாக்குலை தமக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். ஒட்டுமொத்த  முஸ்லிம் சமூகத்துடன் பயங்கரவாத்துடன் தொடர்புபடுத்தி  எங்கள் மீதும் வீண் பழி சுமத்தினார்கள். சமூகத்தை வஞ்சித்தார்கள், சமூகத் தலைவர்களை அதனுடன் இணைத்து பயங்கரவாதிகள் என முத்திரை குத்தினார்கள். உள் நாட்டிலும், சர்வதேசத்திலும் சமூகத்தைப்பற்றிய பிழையான பாதையை எடுத்துச் செல்வதில் நேரடியாக களத்தில் நின்றார்கள். அந்தக் கூட்டமே இன்று கோட்டாவுடன் கைகோர்த்துள்ளது. அது மாத்திரமின்றி கோட்டாவை வேட்பாளராக்க வேண்டும் என்று முண்டியடித்தவர்களும் இவரே. எனவே இவர்களிடன் நிகழ்ச்சி நிரலும் உண்மையான முகமும் ஏற்கனவே தெரிந்த ஒன்றே.

கடந்த காலங்களில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் இந்த இனவாதிகள் கூட்டம்  மேற்கொண்ட திருகுதாளங்கள் அவர்கள் மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களுக்கும்,  முயற்சிகளுக்கும் நாம் துணை போகாது அதனை முறியடித்ததலானலேயே எம்மீது வஞ்சம் தீர்த்தார்க்கின்றார்கள். எதுவித காரணங்களுமின்றி முஸ்லிம் சமூகத்தை கொடுமைப்படுத்தின்றார்கள்.

குளியாப்பிட்டி, குருணாகல மற்றும் கொட்டராமுல்லை போன்ற பிரதேசங்களில் எமது சமூகத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி எம்மை  துவம்சம் செய்தார்கள். அவர்கள்தான் இப்போது கோட்டாவுக்காக வாக்கு கேட்க களத்தில் இறங்கியுள்ளார்கள். கோட்டாவுக்காக பரிந்து பேசுகின்றார்கள். பள்ளிவாசல்களை உடைத்துவிட்டு, குர்-ஆனை எரித்துவிட்டு முஸ்லிம்களின்  சொத்துக்களை சூறையாடிவிட்டு, உயிரை பறித்தெடுத்து விட்டு  இன்று வேட்பாளர் கோட்டாவையும் முஸ்லிம் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் நாதியற்ற வேலையை இந்த நாசகாரிகள் செய்கின்றார்கள்.

பள்ளியின் நடுவே அமர்ந்துகொண்டு வாக்குகளை கேட்பது இவர்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா ? அதற்கு துணை போகும் ஏஜெண்டுகளுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லையா?

கோட்டாவை வெல்ல வைக்க வேண்டும் என்று அவர்கள் தொடங்கிய நீண்ட கால வேலைத்திட்டத்தை மிகவும் கச்சிதமாக இப்போது அரங்கேற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். பெரும்பான்மை சமூகத்தை இன்னுமே உசுப்பேற்றுவதன் மூலம் சிங்கள வாக்குகளை  கொள்ளையடிப்பதும் சிறுபான்மை சமூகத்திலிருந்து எச்சசொச்ச வாக்குகளையெனும் எடுத்துக்கொண்டு கோட்டாவை ஜனாதிபதி ஆக்குவதே அவர்களின் திட்டம் .

அதன் மூலம் சிறுபான்மைச் சமூகம்  விரும்புகின்ற நம்புகின்ற சஜித் பிரேமதாஸவுக்குச் செல்லும் வாக்குகளை தடுப்பது அல்லது அந்த வாக்குகளை நடுநிலையாக்கி கோட்டாவின் வாக்குகளை அதிகரிப்பதே இந்த சதிகாரர்களின் திட்டம்.

தொலைநோக்குடன் இவர்கள் மேற்கொள்ளும் சதி முயற்சிகளின் பின்னணியிலேயே ஹிஸ்புல்லாஹ் விழுந்துள்ளார். முஸ்லிம் வாக்குகள் கோட்டாவுக்கு கிடைக்காது என்ற நிலையிலையே ஹிஸ்புல்லாஹ்வை பகடைக்காய் ஆக்கி முஸ்லிம் வாக்குகளில் சிலதையாவது ஹிஸ்புல்லாஹ்வுக்கு போகச் செய்து, அதன் மூலம் கோட்டாவின் வாக்கை அதிகரிக்கச் செய்வதே இவர்களின் உண்மையான நோக்கம். அந்த வலையிலையே ஹிஸ்புல்லா விழுந்ததுதான் வேதனையானது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சமூகத்தை படாத பாடு படுத்திய இனவாதிகளும், மதவாதிகளும் சமூகத் தலைவர்களின் குரலை நசுக்குவதன் மூலம் தமது எண்ணத்தையும் நீண்டகால கனவையும்  நிறைவேற்றமுடியும் என பகற் கனவு கண்டனர். அதற்காக பல வழிகளிலும் எத்தனித்தனர். சிறுபான்மைச் சமூகம் தாம் ஆதரிக்கும் கோட்டாவுக்கு ஆதரவளிக்காது என  நிச்சயித்ததனாலயே  இவ்வாறான குறுக்குவழி  முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.

தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று முஸ்லிம்களைப் பற்றியும், முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று தமிழர்களைப் பற்றியும் இல்லாத பொல்லாத பிழையான செய்திகளை கூறி வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள்.  அதுமாத்திரமின்றி  பிரதேசத்திற்கு பிரதேசம் சமூகங்களிடம் வேறுபாடுகளை உருவாக்கி அவர்கள் சாதிக்க முயல்கின்றார்கள்.  

ஜனாதிபதித் தேர்தல் வெறுமனே சாதாரண ஒரு  தேர்தல் அல்ல.  சமூகத்தின் பாதுகாப்பு , இருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் இந்த தேர்தலில் நாம் அசமந்தத் தனமாக இருந்து, இனவாதிகளின் சதித்திட்டத்திற்கு இரையாகி விடக்கூடாது.

கோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக நமது சமூகத்திலிருந்தும் சில ஏஜெண்டுகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அவரை வெல்லவைக்க கோடிக்கணக்கில் பணம் வாரி வீசப்படுகின்றது. பத்து வருடமாக இனவாதிகளால் துன்பத்தை அனுபவித்த நமது சமூகம் சஜித்தின் ஆட்சியிலாவது நிம்மதியாக இருக்கும் என நம்புகின்றோம்.

சட்டத்தை கையில் எடுக்கும் இனவாதிகளின் கொட்டத்தை சஜித் பிரேமதாஸ அடக்குவார் என்ற அதீத நம்பிக்கை இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வழங்கிய உறுதிமொழிகள் தேர்தல் பிரசார மேடைகளில் அவரது இதயசுத்தியான பேச்சுக்கள் செயற்பாடுகள் எல்லாமே எமக்கு நம்பிக்கை தருகின்றது.

ஆனால் கோட்டா சார்ந்த கட்சியும் அவரின் கூட இருப்பவர்களும் நமக்கு செய்த அநியாயங்களும் அட்டூழியங்களும் நமது கண் முன்னே வந்து போகின்றது.

சஜித் பிரேமதாஸ கடந்த  காலங்களில் நாட்டின் பிரதானியாகவோ நாட்டுத்தலைவராகவோ இருந்தவர் அல்லர். தூய பெளத்தராக அவரது  செயற்பாடுகள் இருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால், கடந்த காலங்களில் மஹிந்தவின் ஆட்சியின் போது நாம் பட்ட வேதனைகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனவே மீண்டும் அவர்களது அராஜக ஆட்சிக்கு முஸ்லிம்கள் துணை போக முடியாது.

ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டால் நாங்கள் அலட்டிக் கொள்ளப்போவதில்லை. எங்களுக்கு அதுபற்றி எந்தவிதமான அக்கறையுமில்லை. ஆனால், இப்போது அவர் மேற்கொண்டிருக்கும் துரோக செயற்பாடுகள் தான் எமக்கு வேதனையளிக்கின்றது.

ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற போர்வையில் அவர் களமிறங்கி சஜித்தை தோற்கடிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலில் ஆட்பட்டுள்ளார். அதன் மூலம்  முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக நினைப்பதுதான் கவலையானது.

இந்த சமூதாயத்தின் முழுமையான பாதுகாப்பும் , இருப்பும் இத்தேர்தல் முடிவில்தான் தங்கியுள்ளது. ஹிஸ்புல்லா எமது கட்சியில் இருந்தவர். அவரை நாங்கள் முதலமைச்சராக்க ஆசைப்பட்டோம். இந்த பிராந்தியத்தில் அவருக்காக வாக்கு கேட்டு வீடு வீடாக அலைந்திருக்கின்றோம்.

2015இல் மைத்திரிக்கு எமது கட்சி ஆதரவளிக்க முடிவு செய்த போது ஹிஸ்புல்லாஹ் மஹிந்தவுடனே தங்கிவிட்டார். அதற்காக  நாங்கள் அவரை விமர்சிக்கவில்லை, குறைகூறவுமில்லை. அது அவரது ஜனாநயக உரிமை. இப்போது ஹிஸ்புல்லா செய்வதுதான் மிகப் பாரதூரமான சமூகத் துரோகம். அதுவும் அவருக்காகவும் அவரது பல்கலைக்கழகம் காப்பாற்றப்பட வேண்டும் எனபதற்காகவும் துஆப் பிராத்தனைகளில் ஈடுபட்ட முஸ்லிம்களையும் நடுத்தெருவில் விட்டுவிடும் அவரது செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் எதிர்நீச்சலை கைவிடவேண்டு.

சமூகத்தலைமைகள் ஒரு பக்கம் இருக்கும் போது அவர்களிடம் எந்த ஆலோசனையும் பெறாது. சிலரின் நிகழ்ச்சி நிரலில் அகப்பட்டுக்கொண்டு ஏதோவெல்லாம் பேசுகின்றார். தனக்கு கிடைக்கும் வாக்கு ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்கு என வேடிக்கையான கதையளக்கின்றார். முஸ்லிம் மக்கள் இவரின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஏமாறக்கூடாது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் புத்தியுடன் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். சஜித்தை வெல்ல வைப்பதன் மூலமே நமக்கான எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற நாம் ஊட்டுகின்றோம்” என்றார்

இந்த பொதுக்கூட்டத்தில், ராஜாங்க அமைச்சர்களான அலி சாஹிர் மெளலானா, அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகல்லாகமகே, முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாட் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். 

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்