சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

🕔 October 20, 2019

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

ஜித் பிரேமதாஸவை இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம், அவருடன் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பேரம் பேசல்களை மேற்கொள்ள முடியும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ – ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடியதொரு தலைவர் என்றும், அவர் கூறினார்.

புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் தில்லையடி அம்மார் மண்டபத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதி தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி, வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கட்சியின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான எஹியா ஆப்தீன், மன்னார் பிரதேச சபை தலைவர் எம். முஜாஹிர், யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம். உள்ளிட்ட , நகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சி பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் மேலும் அமைச்சர் தெரிவிக்கையில்;

“1000 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட  இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தமது தாய் நாட்டுக்கு துரோகமிழைத்ததில்லை. கடந்த ஏப்ரல் மாத சம்பவத்துடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி படுமோசமான முறையில் எதிர்கட்சி அரசியல்வாதிகள்  செயற்பட்டனர்.

ஒரு தடவை நாடாளுமன்றத்தில் சபை அமர்வின் போது முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவிடம்; ‘இந்த பயங்கரவாதியின் செயலுக்கும் எமக்கும், எமது முஸ்லிம் மக்களுக்கும் எவ்வித  தொடர்புமில்லை, ஒரு போதும் நாட்டின் நற்பெருக்கு களங்கம் இழைக்காத எம்மை ஏன் துன்புறுத்துகின்றீர்கள். தங்களது கட்சியில் இருப்பவர்கள்தான் இந்த இனவாதத்தை பேசி எம்மை வேதனைப்பபடுத்துகின்றனர். இதனை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்று கூறினேன்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யவில்லை.

இஸ்லாத்தில் பயங்காரவாத்துக்கு இடமில்லை என்பதை தெளிவாக சொன்னோம், இந்த பயங்கரவாத்துடன் இஸ்லாமிய தலைவர்களை சேர்த்து பேசாதீர்கள், கண்ணியமான உலமாக்களை இதனுடன் தொடர்புபடுத்தி பிழையாக பேசாதீர்கள், முகப் புத்தகங்களில் பகிர்வு செய்தார்கள் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அநியாயமாக சித்திரவதை செய்யப்படுகின்றார்கள், இது மட்டுமல்லாது மரியாதையான உடையுடன் செல்லும் எமது பெண்களின் கௌரவத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றீர்கள், எங்களது நேர்மையான வர்த்தகர்களின் வியாபாரங்களை  நாசமாக்காதீர்கள், இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கின்ற இந்த சதியினை செய்யாதீர்கள் என்றுதான் நாங்கள் பேசினோம்.

இதனை பேசிய குற்றத்திற்காக எங்களையும் பயங்கரவாதத்துடன் இணைத்து அதனுாடாக அரசியல் லாபம் அடைகின்ற  மிகவும் மோசமான நாசகார செயலை ஒரு சில காலங்களாக ஒரு சில அரசியல்வாதிகள் செய்தார்கள்.

நாங்கள் நாட்டை பிளவுபடுத்துங்கள் என்று போராடியவர்கள் அல்ல. அல்லது இந்த நாட்டை பிரித்து ஒரு பங்கு தாருங்கள் என்று கேட்டவர்களும் அல்லர். இந்த நாட்டிலே பல கலவரங்கள், ஆயுத போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் எங்களுக்கு அநியாயம் இழைக்கின்ற போது, எங்களுககு துன்பம் செய்கின்ற போது, ஆபத்து வருகின்ற போ, நாங்கள் இந்த ஆபத்துக்கும், அநியாயத்துக்கு எதிராக  நியாயத்தை கேட்டு ஜனநாயக ரீதியில் போராடிய சமூகமே ஒழிய, ஒரு போதும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை செய்த சமூகம் அல்ல என்பதை நிரூபித்துகாட்டியிருக்கின்றோம்.

அன்றைய மூதாதையர்கள், அரசியல் தலைவர்களான டி.பி. ஜாயாவாக இருக்கலாம், தனிக்கட்சி அமைத்த பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களாக இருக்கலாம், பதியுதீன் மொஹம்மட் ஆகலாம், அதன் பிற்பாடு வந்த முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கலாம். யாருமே இனவாத, மதவாத, பயங்கரவாத பிரச்சினைகளுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அல்ல என்பதை இந்த நாட்டின் வரலாறு சொல்லும்.

இந்த நாட்டில் வாழும் சகல சமூகங்களும், சமமான உரிமையினை அனுபவிப்பதுடன், சகலருக்கும் சட்டம் சமமான முறையில் இருக்க வேண்டும். இது தான் ஜனநாயம். இந்த ஜனநாயகத்தை பெற்றுத்தரக் கூடிய வேட்பாளரைத்தான் எமது கட்சி ஆதரிக்கும். 

புத்தளம் மக்கள் 1989 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கின்றனர். புத்தளம் மக்களின் இந்த தவிப்பை நிறைவு செய்த கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

புத்தளம் தொகுதி மக்கள் அரசியல் ரீதியாக அதிகாரமின்மையால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் கொண்டுவரப்படும் குப்பைக்கு எதிராக  நாடாளுமன்றத்தில் பேசியவர். பிரதமர் அவரை அழைத்து என்ன வேண்டும் புத்தளம் மக்களுக்கு என்று கேட்ட போது, புத்தளத்துக்கு கொண்டுவரும் குப்பையினை நிறுத்துங்கள் என்றே தெரிவித்தார்.

இந்த தேர்தல் என்பது நாடளாவிய தேர்தல். இந்த தேர்தலில் எமது சமூகம் பிரிந்து நின்று, சமூகத்தின் வாக்குகளுக்கு விலைபேசப்படுகின்ற போது, சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வாக்குகள் சிதறடிக்கப்படும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாகவும், எமது சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் நாம் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த முடிவானது தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் பேரம் பேசக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் நாம் எமது கோரிக்கையினை முன் வைத்து போராட முடியும். சமூகமா, கட்சியா என்று பார்க்கின்ற போது, கட்சியினை விட சமூகமே முக்கியம் என்ற அடிப்பைடயில் சிந்திக்கும் ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  பயணிக்கின்றது.

நாம் இடம் பெயர்ந்து புத்தளம் வந்த போது, எம்மை அரவணைத்து அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் புத்தளம் மக்கள். இன்று அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். இது தொடர்பில் புத்தளத்தில் உள்ள கிளீன் புத்தளம் அமைப்பினர் மிகவும் துாய்மையான எண்ணத்துடன், கட்சி, நிறங்கள் என்பவற்றுக்கு அப்பால் செயற்படுகின்றனர்.

அவர்களது இந்த முயற்சிக்கு  இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்